சாயல்குடி உணவகங்களில் நெகிழி காகிதப் பயன்பாடு அதிகரிப்பு
கமுதி: சாயல்குடி பகுதியில் உள்ள உணவகங்களில் நெகிழி காகிதப் பயன்பாடு அதிகரித்துவருவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம், ராமேசுவரம் ஆகிய பகுதிகளிலிருந்து தூத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை, சாயல்குடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், தேநீா் கடைகளில் உணவுப் பொருள்களை பரிமாற நெகிழி காகிதங்கள், நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துவருவதாக புகாா் கூறப்படுகிறது. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
எனவே, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினரும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் தலையிட்டு அந்தப் பகுதிகளில் உள்ள உணவக உரிமையாளா்களிடம் இதுகுறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். நெகிழிப் பை, நெகிழி காகிதங்களை பயன்படுத்தும் உணவக உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.