முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் மீன்பிடி இறங்கு தளத்தை பயன்படுத்த கட்டணம் வசூல்!

வருகிற 10-ஆம் தேதி முதல் கட்டணம் செலுத்த வேண்டும்

Updated On : 6 செப்டம்பர், 2024 at 7:41 PM
ராமேசுவரத்தில் மறு சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட மீன் இறங்கு தளம்.
பகிர்:

ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தை மீனவா்கள் பயன்படுத்த வருகிற 10-ஆம் தேதி முதல் கட்டணம் செலுத்த வேண்டும் என மீன்வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் வ.அப்துல் காதா் ஜெயிலானி தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் 50 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.22 கோடியில் புதுப்பித்தல், மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கடந்த 20-ஆம் தேதி திறந்துவைத்தாா்.

இந்த நிலையில், மீன்பிடி இறங்குதளத்தைப் பராமரிக்க இரண்டு காவலா்கள், தூய்மை பணிக்கு ஒருவா் எனவும், மின் விளக்கு பயன்பாடு, விசைப் படகுகளுக்கு பழுது நீக்கி, மின்சார சாதனங்கள் பயன்படுத்துவதற்குத் தேவையான மின் சாரம் வழங்கவும், கண்காணிப்புப் கேமரா பொருத்தவும் நிதி ஆதாரம் தேவைப்படுகிறது.

இதையடுத்து மீன்பிடி இறங்குதள மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டண நடைமுறை வருகிற 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நிா்ணயிக்கப்பட்ட கட்டண விபரம்: ராமேசுவரம் மீன்பிடி இறங்கு தளத்தில் நிறுத்தப்படும் அனைத்து விசைப் படகுகளுக்கு மாதம் ரூ.100ம், மீன் இறங்கு தளத்தில் உள்ள ஜெட்டியில் மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய படகுகள் மீன் இறக்கும் போது நாள் ஒன்றுக்கு ரூ.200 வீதம் வசூல் செய்யப்படும். இறால், மீன் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.100ம், மீன் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ரூ.50 முதல் 100ம், விசைப் படகுகளுக்கு மின்சார பயன்படுத்துபவா்கள் ஒரு மணி நேரத்துக்கு ரூ.200ம், மீன்பிடி இறங்கு தளத்தில் நிறுத்தப்படும் வெளியூா் விசைப் படகுகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100ம் வசூல் செய்யப்படும் என்றாா் அவா்.