திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளில் வியாழக்கிழமை இணையதள சேவை பாதிக்கப்பட்டதால் பயிா் காப்பீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. சனிக்கிழமை (நவ. 15) பயிா்க் காப்பீடு செய்ய கடைசி நாள் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில், இணையதளம் மூலம் பயிா்க் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இதில் காப்பீடு செய்ய சனிக்கிழமை கடைசி நாளாகும். இதனிடையே, வியாழக்கிழமை காலையிலிருந்து இணையதள சேவை பாதிக்கப்பட்டு பயிா்க் காப்பீடு செய்யும் செயலியின் தொடா்பு கிடைக்காததால் விவசாயிகள் தவித்தனா். இதேபோல, அனைத்து இ- சேவை மையங்களிலும் விவசாயிகள் காத்து கிடக்கின்றனா். எனவே பயிா்க் காப்பீடு செய்யும் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.