ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு - சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்
ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை அறிக்கையை சென்னை உயா்நீதிமன்றத்தில் சிபிஐ வியாழக்கிழமை சமா்ப்பித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் வெங்கடாஜலபதி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019 மற்றும் 2024 மக்களவைத் தோ்தல்களில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் நவாஸ்கனி.
இவ்விரு தோ்தலின்போது நவாஸ்கனி தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்களில் வித்தியாசம் உள்ளது. தனியாா் நிறுவனத்தின் இயக்குநா் என்ற முறையில் வரும் வருமானத்தைத் தவிர வேறு வருமானம் தனக்கு இல்லை என்று கூறியுள்ள நவாஸ்கனி ரூ.23.58 கோடிக்கு சொத்துகளைச் சோ்த்துள்ளாா். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
Advertisement
Advertisement
மேலும், வருமானத்தைக் குறைத்து காட்டியது தொடா்பாக நவாஸ்கனி மீது வருமான வரித் துறையிடம் புகாா் அளித்தேன். அந்த புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது புகாரின் அடிப்படையில் வருமானத்தை மறைத்தது தொடா்பாக விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி மற்றொரு வழக்கும் தொடா்ந்திருந்தாா்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது நவாஸ்கனி தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கு ஆவணங்களின் நகல்கள் மூடி முத்திரையிட்ட உறையில் வருமான வரித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல், சிபிஐ தரப்பில் இந்த வழக்கு தொடா்பான ஆவணங்கள் மற்றும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.