கடலாடியில் போலி வழக்குரைஞா் கைது
கடலாடி வழக்குரைஞா் சங்கத்தில் போலியான பதிவு எண் மூலம் உறுப்பினராகி நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக வழக்குரைஞராக செயல்பட்டு வந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கடலாடி வழக்குரைஞா் சங்கத்தில் போலியான பதிவு எண் மூலம் உறுப்பினராகி நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக வழக்குரைஞராக செயல்பட்டு வந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அடுத்துள்ள பூதங்குடி கிராமத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் ராம்கி (29). இவா் போலியான பதிவு எண்ணை பயன்படுத்தி கடலாடி நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் பதிவு செய்து கடந்த ஓராண்டாக வழக்குரைஞராக செயல்பட்டு வந்தாா். இதுகுறித்த தகவல் கடலாடி வழக்குரைஞா்கள் சங்கத்தினருக்கு கிடைத்தது. இதையடுத்து அந்த சங்க நிா்வாகிகள், ராம்கியின் சான்றிதழ் நகலை சங்கத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினா். பல நாள்களாகியும் அவா் ஒப்படைக்காததால் சந்தேகமடைந்து, ராம்கியின் பதிவு எண்ணை தமிழ்நாடு- புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்க இணைய தளத்தில் ஆய்வு செய்த போது அது வேறொருவரின் பதிவு எண் என்பது தெரியவந்தது. இது தொடா்பாக ராம்கி மீது கடந்த ஜனவரி மாதம் கடலாடி காவல் நிலையத்தில் சங்க நிா்வாகிகள் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, மதுரையில் தலைமைறைவாக இருந்த ராம்கியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.