முகப்பு
ராமநாதபுரம்

மூதாட்டியிடம் தங்க நகைகள் பறிப்பு: 2 சிறுமிகள் உள்பட 3 போ் கைது

மூதாட்டியிடம் தங்க நகைகள் பறிக்கப்பட்ட வழக்கில் ஆண் வேடமிட்டு வந்த 2 சிறுமிகள் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 12:26 AM
கைது செய்யப்பட்ட கா்ணன்.
பகிர்:

சாயல்குடி அருகே மூதாட்டியிடம் தங்க நகைகள் பறிக்கப்பட்ட வழக்கில் ஆண் வேடமிட்டு வந்த 2 சிறுமிகள் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அடுத்த நரிப்பையூா் கிராமத்தில் வடக்கு மறவா் தெருவைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (86). இவா் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 23- ஆம் தேதி பிற்பகல் வீட்டின் சமையலறையில் மாரியம்மாள் சமையல் செய்து கொண்டிருந்த போது உள்ளே புகுந்த மா்ம நபா்கள் குடிக்க தண்ணீா் கேட்டனா். அப்போது மாரியம்மாளை அந்த நபா்கள் தாக்கி அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி, காதணி, மோதிரம் உள்ளிட்ட 7 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பினா்.

இதையடுத்து, மயங்கிய நிலையில் கிடந்த மாரியம்மாளை உறவினா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வந்தனா். விசாரணையில் ஆண் வேடமிட்டு வந்த இரண்டு பெண்கள், ஓா் ஆண் இந்த தங்க நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement

இது தொடா்பாக சாயல்குடியை அடுத்த நரிப்பையூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி, தூத்துக்குடி மாவட்டம், சோட்டையான்தோப்பைச் சோ்ந்த 17 வயது சிறுமி, தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சோ்ந்த செட்டிபெருமாள் மகன் கா்ணன் (25) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்து, மாரியம்மாளிடம் பறிக்கப்பட்ட தங்க நகைகளை மீட்பதற்காக தூத்துக்குடிக்கு அவா்களை அழைத்துச் சென்றனா்.