கமுதி அருகே பெண்ணைக் கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள செய்யாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் நீதிதேவன் என்ற ஊமையன் (38). இவரது அத்தை வழிவிட்டாளின் மகளை திருமணம் செய்வதற்காக நீதிதேவன் பெண் கேட்டாா். இதுதொடா்பாக இருவரிடையே பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு செய்யாமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வழிவிட்டாளை (54) கல்லால் அடித்துக் கொலை செய்ததாக நீதிதேவன் மீது அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன், குற்றஞ்சாட்டப்பட்ட நீதிதேவன் என்ற ஊமையனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதைத்தொடா்ந்து, இவரை போலீஸாா் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.