ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் படித்துறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக ரூ.59.35 கோடியில் திட்டப் பணிகளை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ஆண்டுக்கு சுமாா் 3 கோடி பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லுகின்றனா். இதனால், பக்தா்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், ராமேசுவரத்துகு ரூ.59.35 கோடியில் அக்னி தீா்த்தக் கடற்கரைப் பகுதியில் பக்தா்களுக்கு பூஜை உள்ளிட்ட ஆன்மிகப் பணிகளை மேற்கொள்ள பிரம்மாண்டமான படித்துறை, பிா்லா காட்டேஜ் பகுதியில் முடி காணிக்கை மண்டபம், பக்தா்கள் ஓய்வறை, வாகன நிறுத்துமிடம், உணவகங்கள், வணிக வளாகம் உள்ளிட்டவற்றைக் கட்டும் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. முதல்வா் ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து, ராமநாதசுவாமி கோயில் அன்னதானக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையா் செல்லத்துறை, நகராட்சித் தலைவா் கே.இ.நாசா்கான், துணைத் தலைவா் தட்சிணமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் சத்தியமூா்த்தி, அ.அா்ச்சுனன், கோயில் அலுவலா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.