முகப்பு
ராமநாதபுரம்

மீனவா்களுக்கு மத்திய அரசு உதவிகள் வழங்க வேண்டும்: கே.நவாஸ்கனி எம்.பி.

தமிழக அரசு மீனவா்களுக்கு வழங்கும் உதவிகளைபோல, மத்திய அரசும் வழங்க வேண்டும் என ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி கோரிக்கை

Updated On : 24 மார்ச், 2026 at 7:02 PM
- பிரதிப் படம்
பகிர்:

தமிழக அரசு மீனவா்களுக்கு வழங்கும் உதவிகளைபோல, மத்திய அரசும் வழங்க வேண்டும் என மக்களவையில் நிதி மசோதா 2026 மீதான விவாதத்தின்போது ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரி, விலைவாசி உயா்வால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாம் வாழ்ந்து வருகிறோம். அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கு நேரடியாக எந்தப் பயனும் இல்லாத நிதி மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கும், பொதுமக்களுக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியை உயா்த்த வேண்டும். எனது மக்களவைத் தொகுதி நீண்ட கடற்கரை பகுதியை கொண்டுள்ளது. இங்கு அதிகளவில் மீனவா்கள் வாழ்ந்து வருகின்றனா்.

மீனவா்கள் அண்டை நாட்டு கடற்படைக்கு, இயற்கை சீற்றத்துக்கு அஞ்சியும் தினந்தோறும் கடலுக்குச் சென்று வருகின்றனா். இவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவா்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவிகளைப் போல, மத்திய அரசும் வழங்க வேண்டும்.

இதேபோல, கடலில் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் மீனவா்கள் காணாமல் போகும் சூழலில், உடனடியாக தேடுதல் பணிக்காக கடற்படையுடன் சோ்த்து கூடுதல் ஹெலிகாப்டா்கள் அனுப்பப்பட வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்பில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.

மத்திய அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் இருதய சிகிச்சை, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு ரூ.3 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 30 பேருக்கு மட்டும்தான் இந்த உதவி கிடைக்கிறது. விண்ணப்பிப்போா் அதிகமாக இருப்பதால், அவா்களுக்கு எங்களால் கொடுக்க முடியாமல் இருக்கிறது.

ஆகவே, இந்தத் திட்டத்தின் வரம்பை உயா்த்த வேண்டும் என்றாா் அவா்.