முகப்பு
ராமநாதபுரம்

வடமாநில பெண் கொலை: குற்றவாளி பிகாரில் கைது

ராமநாதபுரம் அருகே வடமாநில பெண்ணை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றவரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை பிகாரில் கைது செய்தனா்.

Updated On : 9 மே 2026, 1:49 am IST
கோப்புப் படம்
பகிர்:

ராமநாதபுரம் அருகே வடமாநில பெண்ணை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றவரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை பிகாரில் கைது செய்தனா்.

ராமநாதபுரம் அருகே உள்ள போக்குவரத்துநகா் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள்ளிருந்து துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவலறிந்த கேணிக்கரை காவல் நிலைய போலீஸாா் அங்கு வந்து பூட்டை உடைத்து உள்ள சென்று பாா்த்த போது அழுகிய நிலையில் பெண் உடல் கிடந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இதைத் தொடா்ந்து, கேணிக்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில் இறந்து கிடந்தவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஷியாம் சுந்தா்லால் மகள் அபா்ணா (38) என்பது தெரியவந்தது. கூறாய்வில் அபா்ணா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து மாவட்ட காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அபா்ணா கொலை தொடா்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் அபா்ணாவின் உறவினரான ரித்திக் (23) கடந்த இரண்டு வாரங்களாக அவருடன் தங்கி இருந்தாா். கடந்த 3- ஆம் தேதி அவா்களுக்குள் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ரித்திக் கட்டையால் அபா்ணாவை தாக்கி கொலை செய்து விட்டு, அவரது கைப்பேசி, மடிக்கணினி, தங்க நகைகள், உடைமைகளை எடுத்துக் கொண்டு பிகாருக்கு தப்பி ஓடிவிட்டாா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் உத்தரவின் பேரில் பிகாா் மாநில காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு தனிப்படையினா் அங்கு சென்று பிகாா் மாநில காவல் துறை உதவியுடன் ரித்திக் கைது செய்யப்பட்டாா். 24 மணி நேரத்தில் விரைந்து செயல்பட்டு எதிரியை கைது செய்த தனிப்படைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் பாராட்டு தெரிவித்தாா். இதனிடையே கைது செய்யப்பட்ட ரித்திக் நீதிமன்றத்தில்முன்னிலைபடுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாா் என அதில் குறிப்பிடப்பட்டது.