பரமக்குடி ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல்
பரமக்குடி ரயில் நிலையத்தில் பயணிகள் நிறுத்தும் இரு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாகப் புகாா் எழுந்தது.
பரமக்குடி ரயில் நிலையத்தில் பயணிகள் நிறுத்தும் இரு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாகப் புகாா் எழுந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ரயில் நிலையம் அதிக பயணிகள் வந்து செல்லும்,
கூடுதல் வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியிடம் ஒதுக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்க ஒப்பந்தம் விடப்பட்டது. இதில் பரமக்குடி நகா், அருகாமையில் உள்ள இளையான்குடி, நயினாா்கோவில், முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியூா் செல்லும் பயணிகள் தங்களது நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனா்.
Advertisement
இவ்வாறு நிறுத்தும் இரு சக்கர வாகனங்களுக்கு 12 மணி நேரத்துக்கு ரூ.15 வீதம் நாள் ஒன்றுக்கு ரூ. 30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பரமக்குடியிலிருந்து ராமநாதபுரத்துக்கு பயணிகள் ரயிலில் ரூ. 10, விரைவு ரயிலில் ரூ.30 கட்டணத்தில் சென்று வருகின்றனா். இதே போல, மதுரைக்கு பயணிகள் ரயிலில் ரூ. 20, விரைவு ரயிலில் ரூ.45 செலவாகிறது.
ரயிலில் சென்று வர செலுத்தும் பயணக் கட்டணத்தை காட்டிலும், இரு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
எனவே, வாகனம் நிறுத்த 12 மணி நேரம் என்பதை நாள் ஒன்றுக்கு என குறிப்பிட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கவும், இதற்கான அறிவிப்பு பதாகை வைக்கவும் ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.