சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில், அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலாமாண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மானாமதுரையில் பழைய பேருந்து நிலையம் முன்பு கூடிய அதிமுகவினர், மௌன ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியே
வந்தனர். இதில், அதிமுக ஒன்றியச் செயலர் எம். குணசேகரன், நகரச் செயலர் விஜி.போஸ், கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் சின்னைமாரியப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும்
தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
மானாமதுரையில் அனைத்து வார்டுகளிலிலும் கட்சியினர் ஜெயலலிதா உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 14 ஆவது வார்டில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவர் தெய்வேந்திரன் தலைமையில், அதிமுக வினர் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இளையான்குடி நகர் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் அதிமுகவினர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும், மௌன ஊர்வலமும் சென்றனர். இதில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்புவனம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் அதிமுகவினர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.