சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நிலப் பட்டாதாரர்கள் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் தங்களது நிலத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் சன்னதிபுதுக்குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்து பேசியது: சிவகங்கை மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 90ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சீமைக் கருவேல மரங்கள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.6 கோடியே 50 லட்சத்திற்கு ஏலம் விடப்படப்பட்டுள்ளது. இதேபோல் தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஏப்ரல் 10க்குள் பட்டாதாரர்கள் முன் வர வேண்டும். அவ்வாறு அகற்ற தவறும் பட்சத்தில், அரசே அகற்றி அதற்கான செலவு தொகையை அந்த பட்டாதாரரிடமே இரண்டு மடங்காக வசூலிக்கப்படும். அவ்வாறு அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் அவர்களது நிலம் ஏலம் விடப்பட்டு அத்தொகையை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில்,மானாமதுரை வட்டம் சன்னதிபுதுக்குளத்தைச் சேர்ந்த 112 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல்,வாரிசு சான்றிதழ்,இலவச வீட்டு மனை ஒப்படை, பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ்,முதியோர் உதவித் தொகைக்கான உத்தரவுகள் உள்ளிட்ட சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். இதில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.