பாதுகாப்பற்ற நிலையில் அரசுப் பள்ளிகள்: சுற்றுச்சுவர் கட்டித்தர பெற்றோர் கோரிக்கை
திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி தாலுகாக்களில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் இல்லாதததால் பாதுகாப்பற்ற நிலை
திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி தாலுகாக்களில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் இல்லாதததால் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. எனவே சுற்றுச்சுவர் கட்டித்தர பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் வெளியில் சென்று வரும் நிலை உள்ளது. மேலும் பள்ளி வளாகத்திற்குள் மாடுகள் புகுந்து விடுவதால் மாணவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி வளாகத்தில் ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் புகுந்து விடுவதால் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்திற்குள் சமூக விரோதிகள் புகுந்து மது அருந்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். அதேபோல் சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் பள்ளிக்குள் செல்லும் ஆடு மாடுகள் புத்தகங்களை சேதப்படுத்தி விடும் சூழலும் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அரசு பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆசிரியர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.