குன்றக்குடியில் பங்குனி உத்திர விழா தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மார்ச் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் இரவு வேளைகளில் வெள்ளிக் கேடகத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை தங்கரதமும், புதன்கிழமை வையாபுரி குளத்தில் தெப்பமும், வெள்ளி ரத வீதி உலாவும் நடைபெற்றது. 9-ம் நாளான வியாழக்கிழமை தேரோட்டத்தையொட்டி அதிகாலையில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகநாதப் பெருமான் தேரில் எழுந்தருளினார். மாலை 4.15 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் பக்தர்கள் இணைந்து வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் தொடங்கியது. தேர் குன்றக்குடி மலையை வலம் வந்து நிலையை அடைந்தது. பங்குனி உத்திர நாளான வெள்ளிக்கிழமை பகல் 12.15 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு மயிலாடும் பாறைக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்வுடன் விழா நிறைவடைகிறது.
தேரோட்ட விழாவில் காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை மற்றும் சுற்று வட்டாரங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.