வசந்த பெருவிழா: ஸ்ரீ பூமாயி அம்மன் கோயிலில் பொங்கல் வைபவம்
திருப்பத்தூர் ஸ்ரீ பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
திருப்பத்தூர் ஸ்ரீ பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இக் கோயிலில் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற்ற வசந்த பெருவிழாவில், கடந்த மே 4 ஆம் தேதி பூமாயி அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், மே 5 ஆம் தேதி இரவு அம்மனுக்கு கொடியேற்றி காப்புக் கட்டப்பட்டு முதல் நாள் விழாவும் தொடங்கியது. இரண்டாம் நாள் முதல் 8 ஆம் நாள் வரை தினந்தோறும் இரவு அம்மன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி கோயில் குளத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆறாம் நாளில் பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். ஒன்பதாம் நாளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். பத்தாம் திருநாளான திங்கள்கிழமை மாலை 3.30 மணியளவில் கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் பூமாயி அம்மன் தெப்பத்தில் எழுந்தருளினார். கோயில் திருக்குளத்தில் அம்மனுக்கு முதல்முறையாக தெப்ப உற்சவம் நடைபெற்றது. அதையடுத்து நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை வசந்த பெருவிழாக் குழுவினர் செய்திருந்தனர்.