மானாமதுரை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.3.37 கோடி நிதி ஒதுக்கீடு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகம் கட்ட கல்வித்துறை ரூ 3.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ள
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகம் கட்ட கல்வித்துறை ரூ 3.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1,700 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதுமான வகுப்பறைக் கட்டடங்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருந்தாலும் படிப்பிலும் விளையாட்டிலும் இப் பள்ளி மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் சாதனை படைத்து வருகின்றனர். அரசு பொதுத்தேர்வுகளில் இந்த பள்ளியின் மாணவிகள் அதிக விழுக்காடு தேர்ச்சி பெறுகின்றனர்.
மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போதுமான வகுப்பறைக் கட்டிடம், ஆய்வகம், கழிப்பறை, விளையாட்டு மைதானம் இல்லாமல் மாணவிகள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த வசதியை ஏற்படுத்தித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியை சகிதா அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் கல்வித்துறை இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்து தர ரூ 3.37 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாக கல்வித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான பணிகளும் இந்தக் கல்வியாண்டில் தொடங்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.