சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். உடன் சென்ற மேலும் இருவர் காயமடைந்தனர்.
மானாமதுரை அருகேயுள்ள கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன்(18), பூமிநாதன்(18), வெங்கடேஷ்(20). இவர்கள் மூவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் மானாமதுரை வந்துவிட்டு மீண்டும் கீழப்பசலை கிராமத்துக்கு சென்றனர். கேப்பர்பட்டிணம் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த கார் மோதியதில், இருசக்கர வாகனம் நிலைதடுமாறி எதிரே வந்த சரக்கு லாரி மீது மோதியது. இந்த விபத்தில் மேற்கண்ட மூவரும் பலத்த காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் குறித்து மானாமதுரை நகர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.