ஆட்டோவில் பெண்ணைக் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞர், சிவகங்கை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.
சிவகங்கை கோட்டை முனியாண்டி கோயில் பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண், கடந்த ஆகஸ்ட்18 ஆம் தேதி காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி பாண்டியன்(18) என்பவரது ஷேர் ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளார். அப்போது, சிரஞ்சீவி பாண்டியனும் அவரது நண்பர்களும் சேர்ந்து அப்பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், செல்லிடப்பேசியில் விடியோ பதிவும் செய்தனராம்.
இது குறித்த புகாரின்பேரில், சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கீதாலெட்சுமி 4 பேர் மீது வழக்குப் பதிந்து, சிரஞ்சீவி பாண்டியன், வீரக்குமார் (23), தனசேகர் (22) ஆகிய மூவரையும் கைது செய்தார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய சிவகங்கை அருகே உள்ள அழுபிள்ளைதாங்கியைச் சேர்ந்த சந்தோஷ்கண்ணன் (24) என்பவரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், சிவகங்கை குற்றவியல் நீதித்துறை நடுவர் லலிதா ராணி முன் சந்தோஷ்கண்ணன் திங்கள்கிழமை சரணடைந்தார். அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, அவர் சிறையிலடைக்கப்பட்டார்.