சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரைத் தாக்கிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
காரைக்குடி பணிமனையைச் சேர்ந்த அரசுப் பேருந்து மதுரையிலிருந்து காரைக்குடிக்கு புதன்கிழமை வந்து கொண்டிருந்தது. இப்பேருந்தில், மார்க்கண்டேயன்பட்டியைச் சேர்ந்த விஜயன்(21), அவரது சகோதரர் ரமேஷ் (23) ஆகியோர் திருப்பத்தூர் வரை தான் பயணச்சீட்டு பெற்றிருந்தனராம். ஆனால், பேருந்து திருப்பத்தூரை தாண்டி தம்பிபட்டி என்ற இடத்தில் வந்தபோது, இருவரும் பேருந்தில் இருந்து இறங்காததைக் கண்ட நடத்துநர் நவநீதகிருஷ்ணன் அவர்களை இறங்குமாறு சொல்லியுள்ளார்.அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பேருந்து ஓட்டுநர் வடிவேல், நடத்துநர் நவநீதகிருஷ்ணனை விஜயனும், ரமேசும் தாக்கினராம். இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து, விஜயனைகைது செய்தனர். தப்பியோடிய ரமேஷை தேடி வருகின்றனர்.