சிவகங்கையில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வெள்ளிக்கிழமை (ஆக.9) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலர் ஆர். மணிகணேஷ் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இம்முகாமில், ஏராளமான தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. எனவே, பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை தேர்ச்சி மற்றும் ஐடிஐ, டிப்ளமோ ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என, அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.