மானாமதுரை, கமுதி பகுதிகளில் புதன், வியாழக்கிழமைகளில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
மானாமதுரை பகுதியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை குளிக்க வைத்து அவற்றை அலங்கரித்து வீடுகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர். நகரில் கிருஷ்ணராஜபுரம், ரயில்வேகாலணி, கள்ளர்தெரு மற்றும் கிராமங்களில் சிறுவர் சிறுமிகளுக்கு உறிஅடித்தல், நடனம், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு இதில் கலந்து கொண்டவர்களுக்கு விழா ஏற்பட்டாளர்கள் பரிசு வழங்கி பாராட்டினர். இளையான்குடி பகுதிகளிலும் சிறுவர் சிறுமிகளுக்கு பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
கமுதியில்... அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா தலமை மருத்துவ அதிகாரி விஜயா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக அரசு மருத்துவமனை வளாகங்கள் பணியாளர்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு, பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. செவிலியர்கள், பணியாளர்கள், நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்களுக்கு பொங்கல், கரும்பு வழங்கப்பட்டு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும், துணிப்பைகளை பயன்படுத்தவும் உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.
தேவகோட்டையில்... ராம்நகர் சோமசுந்தரம் நகரின் குடியிருப்போர் நலச்சங்கம் 5 ஆம் ஆண்டுவிழா மற்றும் சமத்துவபொங்கல் விழா காவல் ஆய்வாளர் கீதா தலைமையில் புதன் கிழமை நடைபெற்றது.
காலையில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலையில் நடைபெற்ற சங்க ஆண்டுவிழாவிற்கு மருத்துவர் கனியன் பூங்குன்றன் தலைமை வகித்தார்.
முன்னதாக சங்கத் தலைவர் பாலு வரவேற்றார். சங்க ஆலோசகர் பாலசுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார். குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேவகோட்டை மகாராஜன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. ஆசிரியர் அன்பரசன் நன்றி கூறினார்.