சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பெரிச்சிகோயிலில் செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
பெரிச்சிகோயில் சுகந்தனேஸ்வர கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டிற்கு காலை முதல் கண்டரமாணிக்கம், பட்டமங்கலம், திருக்கோஷ்டியூர், ஆலங்குடி, கல்லல், திருப்பத்தூர், மதகுபட்டி, ஆகிய பகுதிகளிலிருந்து காளைகளும், மாடுபிடி வீரர்களும் திரண்டனர்.
இதில் 300-க்கும் மேற்பட்ட மாடுகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன. அரசு அனுமதி பெறாத மஞ்சுவிரட்டு என்பதால் கள்ளிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமரன் நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் கோட்டைராஜன், முருகன், பெரியசாமி, மணி, ராமச்சந்திரன் ஆகியோர் மஞ்சுவிரட்டு நடத்தியதாகவும், லெட்சுமணன், சிவப்பிரகாஷ், இளையராஜா, வயிரவன், வடிவேல், பொன்னையா ஆகியோர் அனுமதியின்றி மாடு அவிழ்த்து விட்டதாகவும் நாச்சியாபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.