டிப்ளமோ முடித்த மற்றும் கணிதத்தைப் பாடமாகக் கொண்டு பி.எஸ்சி. முடித்த மாணவர்கள், பி.இ., பி.டெக்., நேரடி இரண்டாமாண்டுக்கு விண்ணப்பிக்க, ஜூன் 16-ஆம் தேதி கடைசி எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் சேர இந்த ஆண்டும் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது.
தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் நேரடி இரண்டாண்மாண்டுக்கான சேர்க்கைக்கு, காரைக்குடி அழகப்பச் செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான கலந்தாய்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அதனால், ஆன்-லைனில் பதிவு செய்யும் மாணவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து காரைக்குடி அழகப்பச் செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி முகவரிக்கு ஜூன் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி
வைக்கவேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டப்பட்டது.
நேரடி இரண்டாமாண்டில் சேர்ந்து படிப்பதற்கு, கடந்த ஆண்டு (2018-2019) 12,021 விண்ணப்பங்கள் ஆன்-லைன் மூலம் பெறப்பட்டது. அதில், 11,164 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கலந்தாய்வு நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு (2019- 2020) இந்த அளவுக்கு விண்ணப்பிக்கப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை 6 ஆயிரம் மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்காகப் பதிவு செய்துள்ளனர். ஆனால், 3 ஆயிரம் விண்ணப்பங்களே பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக, கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 16 என்ற நிலையில், பதிவு செய்திருப்பவர்களாவது விண்ணப்பிப்பார்களா என்ற சந்தேகம் கல்லூரி வட்டாரங்களில் நிலவுகிறது.
இந்நிலையில், நிகழாண்டுக்கான கலந்தாய்வு ஜூன் கடைசி வாரத்தில் தொடங்கி, ஜூலை முதல் வாரத்தில் முடிக்கப்படவேண்டும்.
எனவே, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், பணியிலிருந்த முதல்வர் ஓய்வுபெற்றுச் சென்றுவிட்டதாகவும், புதிய முதல்வர் பொறுப்பேற்றதும் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்றும், பேராசிரியர்கள் தெரிவித்தனர்.