கமுதி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலர் மற்றும் தலைமை எழுத்தர் ஆகியோரை அவமதிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டியதாக 6 பேர் மீது காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கமுதியை அடுத்துள்ள காத்தனேந்தல் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இச்சங்கத்தின் மூலம் காத்தனேந்தல், குமிலாங்குளம், பறையங்குளம், வேடாங்கூட்டம், ஆரைகுடி, மோயங்குளம், தம்பிரான் கூட்டம், புதுகுடியிருப்பு, கம்மாபட்டி, நெறுஞ்சிப்பட்டி உள்ளிட்ட 10 கிராம விவசாயிகள் விவசாயக் கடன், நகைக் கடன்களை பெற்று வருகின்றனர்.
மேலும் மானிய விலையில் உரம், வறட்சி நிவாரணம், பயிர்காப்பீடு போன்ற அரசு திட்டங்களிலும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் விவசாய நகைக் கடன் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
சங்கத்தில் ஏற்கெனவே இவர்களுக்கு கடன் தொகை நிலுவையில் இருப்பதாகக் கூறி, கூட்டுறவு சங்க நிர்வாகம் மனுக்களை தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கூட்டுறவு சங்கச் செயலர் முத்துராமலிங்கம், தலைமை எழுத்தர் வேல்முருகன் ஆகியோரை விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதுகுறித்து தலைமை எழுத்தர் வேல்முருகன் கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் காத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பூமி, குமிலாங்குளத்தைச் சேர்ந்த ராஜாராம், பழனிச்சாமி, முருகேசன், ராமலிங்கம், பறையங்குளம் முனியாண்டி ஆகியோர் மீது புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் கோவிலாங்குளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.