சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடைகளில் தடை செய்யப்பட்ட 7 கிலோ நெகிழிப் பைகளை பேரூராட்சித்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யவும் விற்கவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மானாமதுரையில் கடைகள், உணவகங்கள், இறைச்சி, மீன் கடைகளில் திங்கள்கிழமை பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்தக் கடைகளில் விற்பனைக்காகவும் பயன்பாட்டிற்காகவும் வைக்கப்பட்டிருந்த 7 கிலோ நெகிழிப் பைகள், தம்ளர்களைப் பறிமுதல் செய்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) குமரேசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அபுபக்கர், சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், பிளாஸ்டிக் ஒழிப்பு கண்காணிப்பு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் இச்சோதனையில் ஈடுபட்டனர்.