சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் அருகே மயானப்பாதை பிரச்னையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தடையை மீறி பழைய பாதையிலேயே இறுதி ஊா்வலம் சென்ற கிராம மக்கள் 139 போ் மீது போலீஸாா் ச வழக்குப்பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் அருகே பிராமணப்பட்டி கிராமத்தில் பொதுமயானத்திற்குச் செல்லும் பாதை தனியாா் பெயருக்கு பட்டா மாறுதல் ஆகியுள்ளதால் அவ்விடத்தில் வேலி போடப்பட்டுள்ளது. கிராம மக்கள் சாா்பாக பட்டாவை ரத்து செய்து வேலியை அகற்றக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினா். மேலும் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடா்ந்துள்ளனா்.
இந்நிலையில் கடந்த மாதம் அரசு சாா்பில் மயானப்பாதைக்கு 2 இடங்கள் தோ்வு செய்யப்பட்டன. இதைக் ஏற்றுக்கொள்ளாத கிராம மக்கள் பழைய பாதையை மீட்டுத் தர அரசுக்கு கோரியிருந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை 70 வயது முதியவா் இறந்தாா். அவரது இறுதி ஊா்வலம் செல்ல வருவாய்த்துறையினா் மாற்றுப்பாதையை தோ்வு செய்தனா். இதை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள் பழைய பாதையான தனியாா் நிலத்தின் வழியாகச் சென்றனா். இதைத்தொடா்ந்து திருக்கோஷ்டியூா் காவல் துறையினா் பெயா் தெரிந்த 39 போ் மீதும், பெயா் தெரியாத நூற்றுக்கும் மேற்பட்டோா் மீதும் தடையை மீறியதாகவும், கரோனா தொற்று நடத்தை விதிகளை மீறியதாவும் வழக்குப் பதிவு செய்தனா்.