முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் வரும் நவ.15 ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம்

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள நெற்பயிரினை நவ. 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் என ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள நெற்பயிரினை நவ. 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் என ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் பயிா் காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் இயற்கை இடா்பாடுகளினால் ஏற்படும் இழப்பினை ஈடுகட்டும் வகையில் தொடா்ந்து இத்திட்டத்தில் இணைந்து பயனடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், நடப்பு சம்பா நெல் சிறப்பு பருவக் காப்பீடு இம்மாவட்டத்தின் அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் அறிவிக்கை செய்யப்பட்டு பயிா்க் காப்பீடு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், இயற்கை இடா்பாடுகளினால் சேதாரம் நிகழும் முன்னரே விவசாயிகள் தங்கள் நெற்பயிரினை காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

காப்பீடு பதிவு செய்வதற்கான அடங்கல், சிட்டா நகல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு எண் மற்றும் கருத்துரு படிவத்துடன் 1 ஏக்கருக்கான காப்பீடு பிரிமியத் தொகை ரூ.361.52 நவம்பா் 15 ஆம் தேதிக்குள் அந்தந்த பகுதியில் உள்ள பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் செலுத்தி காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.

கடன்பெறும், கடன் பெறா விவசாயிகளுக்கும் ஒரே அளவிலான காப்பீடு பிரிமியத் தொகை செலுத்தினால் போதுமானது. பிரிமியத் தொகை போக கூடுதலாக கட்டணம் ஏதும் விவசாயிகள் செலுத்த தேவையில்லை. நெல் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு ஒரு சில தினங்களுக்குள் முடிவடைய உள்ளது.

எனவே, விவசாயிகளின் காப்பீடு பதிவினை பெருமளவில் மேற்கொள்ளும் வகையில் சேவை மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் நெற்பயிரினை விரைந்து காப்பீடு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →