மானாமதுரை அருகே புல்டோசர் இயந்திரத்தில் பைக் மோதி விவசாயி பலி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே திங்கள்கிழமை இரவு சாலையோரத்தில் நின்ற புல்டோசர் இயந்திரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி பலியானார்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே திங்கள்கிழமை இரவு சாலையோரத்தில் நின்ற புல்டோசர் இயந்திரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி பலியானார்.
மற்றொருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கபண்டியன்(50). இவர் திருப்பாச்சேத்தியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திமுக பிரமுகரான தங்கபாண்டியன் கடந்த முறை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் இப்பகுதியில் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில் தங்கப்பாண்டியன் ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி இருவரும் சிவகங்கையிலிருந்து பைக்கில் மானாமதுரைக்கு வந்து கொண்டிருந்தனர். மானாமதுரை அருகே உள்ள கொன்னக்குளம் விலக்கு பகுதியில் வந்தபோது சாலையோரத்தில் நின்ற புல்டோசர் இயந்திரத்தின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவத்தில் தங்கபாண்டியன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரியசாமி பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் குறித்து மானாமதுரை சிப்காட் காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.