47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு! - டிரம்ப்
ஈரான் மீதான நடவடிக்கைகள் எப்போதோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது, இந்த உலகம் அமெரிக்கா, இஸ்ரேல் மூலம் எடுத்துள்ளது...
47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் அமெரிக்க படைத்திறத்தால் முற்றிலும் தகர்க்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஈரான் மீதான நடவடிக்கைகள் எப்போதோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது, இந்த உலகம் அமெரிக்கா, இஸ்ரேல் மூலம் மேற்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஈரான மீதான அமெரிக்காவின் ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ ராணுவ நடவடிக்கைகள் பற்றி திங்கள்கிழமை(மார்ச் 16) இரவில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் பேசுகையில், “ஈரானிய தலைமையால் நிலவிய அச்சுறுத்தல்களுக்கு முடிவுகட்ட எங்களது சக்தி வாய்ந்த ராணுவ நடவடிக்கை கடந்த சில நாள்களாக முழுவீச்சில் தொடர்ந்தது. அதன் விளைவாக அவர்கள் (ஈரான்) முற்றிலும் தகர்க்கப்பட்டனர்.
அவர்களது விமானப்படை , கடற்படை எல்லாம் முடிந்து போயிற்று. கப்பல்கள் பல அழிக்கப்பட்டன. அவர்களது தலைவர்கள அழிக்கப்பட்டனர்.
Advertisement
47 ஆண்டுகளாக அவர்கள் பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய நிலையில், இப்போது இந்த உலகம், அமெரிக்கா வழியாக, இஸ்ரேல் உதவியுடன் பல ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகளை இப்போது மேற்கொண்டுள்ளது” என்றார்.
ஹோர்முஸ் நீரிணையை பொருளாதார ஆயுதமாகப் பயன்படுத்தும் ஈரான்:
ஈரான் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியைப் பொருளாதார ஆயுதமாகப் பயன்படுத்தி வந்திருப்பதாகவும், அத்தகைய செயலை இனியும் அவர்களால் தொடர முடியாதெனவும் டிரம்ப் குறிப்பிட்டார். பல நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பியிருப்பதாக தம்மிடம் தெரிவித்துள்ளன என்றும் அவர் கூறினார்.
ஈரானின் எண்ணெய் முனையமான கார்க் தீவுப் பகுதியில் அமெரிக்காவின் தாக்குதல்களைப் பற்றி பேசிய அவர், “அந்தத் தீவில் எண்ணெய்க் குழாய்களைத் தவிர அனைத்தையும் தாக்கி அழித்துவிட்டோம். ஈரானின் பாதுகாப்புத்துறை கட்டமைப்பை ஆக்ரோஷத்துடன் சிதைத்துள்ளோம். இதனால் அவர்களது ஏவுகணைகள், ட்ரோன் தயாரிப்பும் ஒன்றுமில்லாமல் சுழியமாகிவிட்டது.
ஹோர்முஸ் நீரிணையில் நடைபெறும் வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு அவர்கள் விளைவிக்கும் அச்சுறுத்தல்களையும் ஒடுக்கி வருகிறோம். அதன் ஒருபகுதியாக, அந்தக் கடல் பகுதியில் கண்ணிவெடி வைக்கும் அவர்களது 30 கப்பல்களையும் அழித்துவிட்டோம்.
ஈரான் எங்கிலும் 7,000 இலக்குகளை நாங்கள் தாக்கியுள்ளோம். அவற்றுள் பெரும்பாலானவை வணிக மற்றும் ராணுவ தளங்கள். ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திறனை 90 சதவீதம் அளவுக்கும் ட்ரோன் தாக்குதல்கள் திறனை 95 சதவீதம் அளவுக்கும் குறைத்துள்ளோம். 100-க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை கப்பல்களை மூழ்கடித்துள்ளோம். இவையனைத்தும் கடந்த ஒன்றரை வார காலத்தில் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருமுறை அனைத்து திசைகளிலிருந்தும் கூடுதலாக தாக்குதல்கள் தொடருகின்றன” என்றார்.