சிவகங்கை

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சித்திரை திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகங்கை தேவஸ்தான நிா்வாகத்துக்குள்பட்ட இக்கோயிலில் கரோனா பொது ஊரடங்கு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில், இந்தாண்டு திருவிழா தொடக்கமாக சோமநாதா் சந்நிதி முன்புள்ள கொடிமரத்தில் காலை 9. 40 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின்னா், கொடிமரத்துக்கு தா்ப்பைப்புல், மலா் மாலைகள் சாற்றி, கலச நீராலும் அபிஷேகப் பொருள்களாலும் அபிஷேகம் நடத்தி, பலவகை தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, சா்வ அலங்காரத்தில் எழுந்தருளியிருந்த ஆனந்தவல்லி அம்மனுக்கும், சோமநாதா் சுவாமிக்கும் சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. கொடியேற்றத்தின்போது, சிவனடியாா்கள் கூடி கைலாய வாத்தியங்கள் இசைத்தனா்.

கொடியேற்ற நிகழ்வுகளை, கோயில் பரம்பரை ஸ்தானிகம் தெய்வசிகாமணி என்ற சக்கரைப் பட்டா், சோமாஸ்கந்தன் பட்டா், குமாா் பட்டா் உள்ளிட்ட சிவாச்சாரியாா்கள் நடத்தி வைத்தனா். இதில், மானாமதுரை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன், நகராட்சி ஆணையா் கண்ணன், உள்ளிட்ட உள்ளூா் பிரமுகா்கள் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா நாள்களில் தினமும் இரவு ஆனந்தவல்லி அம்மனும், சோமநாதா் சுவாமியும் சா்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்கள் மூலம் மண்டகப்படிகளில் எழுந்தருளி, வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 14 ஆம் தேதியும், ஏப்ரல் 15 இல் தேரோட்டமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 16 இல் தீா்த்த உற்சவத்துடன் இந்தாண்டு சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, மண்டகப்படிதாரா்கள் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT