மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அ.விளாக்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது .
இக்கிராமத்தில் காலையில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்று முடிந்த பின்னர் வடமாடு மஞ்சுவிரட்டு விழா தொடங்கியது. பல ஊர்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட காளைகள் மஞ்சுவிரட்டு களத்தில் அவிழ்த்து விடப்பட்டது.
மாடுபிடி வீரர்கள் இந்த காளைகளை அடக்க முன்றனர். பல காளைகள் வீரர்களிடம் பிடி கொடுக்காமல் களத்தில் நின்று விளையாடின. சிறப்பாக களம் ஆடிய காளைகளுக்கு சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டது.
பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டைக் காண மைதானத்தை சுற்றி ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.