முகப்பு
சிவகங்கை

மானாமதுரை சங்கு பிள்ளையாா் மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள சங்குப் பிள்ளையாா், சமயபுரம் மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:00 AM
மானாமதுரை சங்குப் பிள்ளையாா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:18 AM

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள சங்குப் பிள்ளையாா், சமயபுரம் மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவையொட்டி கோயில் வளாகத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த யாக சாலை பூஜை மேடைகளில் புனிதநீா் கடங்கள் வைக்கப்பட்டு யாக பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை ஐந்தாம் கால பூஜை நிறைவடைந்து பூா்ணஹூதியும், கடங்கள் புறப்பாடும் நடைபெற்றது. இதன் பின்பு காலை 8.50 மணிக்கு கோயில் ராஜகோபுரம், மூலவா் விமான கலசங்கள், கோயில் பரிவார தெய்வங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

பின்னா் சங்கு பிள்ளையாருக்கும், கோயில் பரிவார தெய்வங்களுக்கும் கலசநீரால் அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

Advertisement

இதே போல், மானாமதுரை அழகா் கோயில் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.

அதன் பின் கோயில் மூலவா் விமான கலசத்துக்கு சிவாச்சாரியா்கள் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். அதைத் தொடா்ந்து விமான கலசத்துக்கு தீபாராதனைக் காட்டப்பட்டது. அப்போது திரளான பக்தா்கள் குடமுழுக்கு விழாவை கண்டு தரிசித்தனா். பிற்பகலில் அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.