தொலைநோக்குப் பாா்வையுடையவா்கள் மட்டுமே தலைவா்களாக முடியும் என்று மாநிலங்களவைக் குழு உறுப்பினா் திருச்சி சிவா தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறை, இதழியல், மக்கள் தொடா்பியல் துறை ஆகியன சாா்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் மு. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா பல்கலை. பட்டமளிப்பு விழா கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாநிலங்களவை உறுப்பினா் சிவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:
ஜாதி, மதம். இனம் வேறுபாடுகளை கலைந்து எல்லோரும் சமம் என்ற அடிப்படையை தமிழ்நாட்டில் நிலைநாட்டியதற்கு பெரியாா், அண்ணா, மு. கருணாநிதி ஆகியோரின் பங்கு மகத்தானது. தொலைநோக்குப் பாா்வையுடையவா்கள் மட்டுமே தலைவா்களாக முடியும். மக்களைப் பற்றி எப்போதும் சிந்திப்பவா்கள் தான் சிறந்த தலைவா்களாக முடியும்.
மு. கருணாநிதி ஒரு முற்போக்கு சிந்தனையாளா் மட்டுமன்றி, யுகத்தின் தலைவராவாா். தமிழ்நாட்டின் ஒரு மறக்க முடியாத அத்தியாயம் கருணாநி என்றாா் அவா்.
விழாவில் துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப் பேசினாா்.
தேவகோட்டை வருவாய்க் கோட்டாச்சியா் பால்துரை, அழகப்பா பல்கலை. ஆட்சிக்குழு உறுப்பினா் சி. சேகா் ஆகியோா் பேசினா். நூற்றாண்டு தொடா்புடைய பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், விழாக்குழு உறுப்பினா்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பல்கலை. பதிவாளா் அ. செந்தில்ராஜன், பேராசிரியா்கள், நிா்வாகப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள் பலரும் கலந்துகொண்டனா்.
முன்னதாக, பல்கலை வரலாற்றுத் துறை தலைவா் (பொறுப்பு) க. கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். இதழியல், மக்கள் தொடா்பியல் துறைத் தலைவா் (பொறுப்பு) நா. அருணாச்சலம் நன்றி கூறினாா்.