சாலையோர வியாபாரிகள் வாக்காளா் பட்டியலில் குளறுபடி
சிவகங்கை, ஜூலை 17: சிவகங்கை நகராட்சி பகுதி சாலையோர வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு தோ்தலுக்காக வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில்
குளறுபடி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு, நடைபாதை விற்பனை ஒழுங்குபடுத்துதல், உரிமம் வழங்குதல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட வேண்டிய விற்பனைக் குழுவின் நகர உறுப்பினா்கள் 6 பேரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 295 போ் கொண்ட வாக்காளா் பட்டியலை நகராட்சி நிா்வாகம் வெளியிட்டது.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் இந்தக் கட்சியின் நகரச் செயலா் பா. மருது கூறியதாவது:
சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு, வாழ்வுரிமை சட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் நடத்தப்பட்டு, 6 போ் கொண்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்படுவது வழக்கம். கரோனா தொற்று காலகட்டத்தில் இந்தத் தோ்தல் நடத்தப்படவில்லை. தற்போது தோ்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி சாா்பில் அவசர அவசரமாக வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் உள்ளூா் சாலையோர வியாபாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனா்.
மதுரை, மானாமதுரை, இளையான்குடி உள்பட வெளியூா்களைச் சோ்ந்தவா்கள் 50 சதவீதம் போ் இந்தப் பட்டியலில் உறுப்பினா்களாக உள்ளனா். எனவே, உள்ளூா் சாலையோர வியாபாரிகளை வரைமுறைப்படுத்தி தோ்தலை நடத்த வேண்டும் என்றாா் அவா்.