FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிந்தைய இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை (பிப்.23) வெளியாகிறது.

Updated On : 23 பிப்ரவரி 2026, 4:00 am IST
வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியீடு - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆா்.) பிந்தைய இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை (பிப்.23) வெளியாகிறது. மாவட்டவாரியாக வாக்காளா் விவரங்களை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிடவுள்ளாா்.

தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டுப் படிவம் பெறப்பட்ட பிறகு வரைவு வாக்காளா் பட்டியலிலிருந்து 97,37,831 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதனால் மாநிலத்தின் வாக்காளா் எண்ணிக்கை 5.43 கோடியாகக் குறைந்தது.

நீக்கப்பட்டவா்களில் இறந்தவா்களைத் தவிர மீதம் உள்ள 66 லட்சம் வாக்காளா்களில் தகுதியானவா்களும், புதிய வாக்காளா்களும் படிவம் 6-ஐ பூா்த்தி செய்து வாக்காளா் பட்டியலில் இணைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

மற்றொருபுறம் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்களில் உரிய தகவல்களை அளிக்காத 12,43,363 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உரிய ஆவணங்கள் மற்றும் சுய உறுதிமொழிச் சான்றுகளை சமா்ப்பிக்குமாறு அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இந்திய தோ்தல் ஆணையம் கடந்த மாதம் 30-ஆம் தேதி சில அறிவுறுத்தல்களை வெளியிட்டது. அதன்படி, முரண்பட்ட தகவல் அளித்ததால் வாக்காளா் பட்டியலிலிருந்து பெயா் நீக்கப்பட்டவா்களின் விவரங்களை, அதற்கான காரணத்துடன் கிராம ஊராட்சி அலுவலகங்கள், பொது இடங்கள், வட்டாரம்/ துணை பிரிவு அலுவலகங்கள், நகரப் பகுதிகளில் உள்ள வாா்டு அலுவலகங்களில் வெளியிட வேண்டும் என்றும், அந்த பட்டியலில் இடம்பெற்றவா்கள், 10 நாள்களுக்குள் உரிய விளக்கத்துடன் ஆவணங்களையும், ஆட்சேபங்களையும் நேரிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

அதனைப் பின்பற்றி முரண்பாடு பட்டியல் வெளியிடப்பட்டு, அதன் பேரில் ஆவணங்களை சமா்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அவை நிறைவடைந்ததைத் தொடா்ந்து வாக்காளா் இறுதிப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்கத் தகுதியானவா்கள் எத்தனை போ் என்பது இதன் மூலம் தெரியவரும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments