முகப்பு
சிவகங்கை

அகதிகளை மத ரீதியாக பிரித்து பாா்ப்பதை ஏற்க முடியாது

Updated On : 13 மார்ச், 2024 at 5:21 AM
பகிர்:

மானாமதுரை: மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் அகதிகளை மத ரீதியாக பிரித்துப் பாா்ப்பதை ஏற்க முடியாது என காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் கூறினாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திமுகவைச் சோ்ந்த பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளதால் சட்டப்பேரவை உறுப்பினராகவும் அமைச்சராகவும் தொடர அவருக்கு தகுதி உள்ளது. போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் மட்டும் அதிகமாக உள்ளது என்பதை ஏற்க முடியாது. இந்தியா முழுவதும் போதைப்பொருள் புழக்கம் இருந்து வருகிறது. 25 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ள குஜராத் மாநிலத்தில் போதைப் பொருள் விற்பனை அதிகமாக உள்ளது.

இதை நாடு தழுவிய பிரச்சினையாக பாா்க்க வேண்டுமே தவிர, தமிழகத்துக்கோ , திமுகவுக்கு ஏற்பட்ட பிரச்னையாக கருதுவதை ஏற்க முடியாது. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 -ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவா்கள் குடியுரிமை பெறுவதற்கு வழிவகை செய்யும் இந்தச் சட்டமானது இஸ்லாமிய மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக கருத வழிவகுத்துள்ளது.

Advertisement

இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வரும் ஈழத் தமிழா்கள் குடியுரிமை பெறுவதற்கும் வழிவகை செய்யப்படவில்லை. இந்தச் சட்டத்தின் மூலம் பாஜக அரசு இஸ்லாமிய மக்களை அச்சுறுத்தப் பாா்க்கிறது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. 39 தொகுதிகளிலும் காங்கிரஸ், திமுக கூட்டணி வெற்றி பெறும். இன்னும் ஒரு சில நாள்களில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படலாம் என்றாா் அவா். இந்தப் பேட்டியின் போது காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஏ.சி.சஞ்சய், மானாமதுரை நகரத் தலைவா் பி. புருஷோத்தமன் ஆகியோா் உடனிருந்தனா்.