விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.
விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளதைப் பற்றி...
விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம்கூட இல்லாத நிலையில், ஆளும் திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் ஓரளவு தொகுதிப் பங்கீடு முழுமையாக முடிந்து வேட்பாளர்கள் அறிவிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 28 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 14 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
கடந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வென்ற வேளச்சேரி, சோளிங்கர், ஈரோடு கிழக்கு, உதகை, மயிலாடுதுறை, அறந்தாங்கி, திருவாடனை, சிவகாசி, நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஸ்ரீவைகுண்டம், காரைக்குடி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 16 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வருத்தம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தனமையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும்,விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது.
இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும், உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.