பாஜகவுடன் கூட்டணி வைத்த எந்தக் கட்சியும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை! ஜோதிமணி
அதிமுக கட்சி உடைந்தது பற்றி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிவு...
பாஜகவுடன் கூட்டணி வைத்த எந்தக் கட்சியும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் அதிமுகவுக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் வலுவடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க 17 எம்எல்ஏக்களும், எஸ்.பி. வேலுமணியை நியமிக்க 30 எம்எல்ஏக்களும் தனித்தனி அணிகளாக இடைக்கால சட்டப்பேரவைத் தலைவரிடம் திங்கள்கிழமை கடிதம் கொடுத்தனர்.
Advertisement
அதிமுக எதிர்ப்பு எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவளிக்க உள்ளதாகவும் அவர்களை முதல்வர் விஜய் இன்று பிற்பகல் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இதுபற்றி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி,
"அதிமுகவை அழிக்க வேண்டும் என்கிற பாஜகவின் கனவு நினைவாகி வருகிறது. நீண்ட காலம் தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா என்று மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி. இன்று இரண்டுபட்டு நிற்கிறது. இந்தியாவில் பாஜகவுடன் கூட்டணி வைத்த எந்தக் கட்சியும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதுவே இன்று அதிமுகவிற்கும் நிகழ்கிறது. வருந்துகிறேன்" என்று கூறினார்.
மேலும், தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு இன்று முதல்வர் விஜய் வறுத்து மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதேநேரத்தில் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் தன்னால் சென்னைக்கு வர இயலவில்லை என்றும் கூறியுள்ளார்.