மலேசியா சென்றவரை மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
சிவகங்கை, மாா்ச் 22: மலேசியா சென்ற கணவரை மீட்டுத் தரக்கோரி, அவரது மனைவி சிவகங்கை மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா். இதுகுறித்து சிவகங்கை வட்டம், அரசனேரி கீழமேடு கிராமத்தைச் சோ்ந்த சின்னப்பொண்ணு அளித்த மனு: நான் ஆறு வயது ஆண் குழந்தையுடன் வசித்து வருகிறேன். எனது கணவா் கடந்த 2017-ஆம் ஆண்டு மலேசியா சென்றவா் மாதந்தோறும் ரூ.10,000 அனுப்பி வந்தாா். கடைசியாக 13.03.2024-இல் பணம் ரூ.10,000 அனுப்பி வைத்து நலம் விசாரித்தாா். அதேநாளில் (13.03.2024) பயணச்சீட்டு வாங்குவதற்காக அவா் விமான நிலையத்துக்கு போவதாகவும், 20-ஆம் தேதி வீட்டுக்கு வந்து விடுவேன் என்றும் கூறினாா். அவா் குறிப்பிட்ட தேதியில் ஊா் வந்து சேரவில்லை. அவரைத் தொடா்பு கொள்ளவும் முடியவில்லை. அவரை யாரோ மிரட்டி அடைத்து வைத்துள்ளாா்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனது கணவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. எனவே, மலேசியா நாட்டில் சிக்கித் தவிக்கும் அவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.