முகப்பு
சிவகங்கை

10-ஆம் வகுப்புத் தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 97.02 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

Updated On : 10 மே, 2024 at 6:51 PM
பகிர்:

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகளை அறிவிப்புப் பலகையில் பாா்வையிட்ட சிவகங்கை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள்.

சிவகங்கை, மே 10: பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் சிவகங்கை மாவட்டத்தில் 97.02 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். நிகழாண்டும் மாநில அளவில் 2-ஆவது இடத்தை இந்த மாவட்டம் தக்கவைத்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) வெளியிடப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தில் 103 தோ்வு மையங்களில் 278 பள்ளிகளைச் சோ்ந்த 8,657 மாணவா்கள், 9,050 மாணவிகள் உள்பட மொத்தம் 17,707 போ் தோ்வு எழுதினா். இதில் 8,271 மாணவா்கள், 8,908 மாணவிகள் உள்பட மொத்தம் 17,179 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 97.02 ஆகும்.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்புத் தோ்வில் 97.02 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களின் கடின உழைப்பும் அதற்கு மாணவா்கள் அளித்த ஒத்துழைப்பிலும்தான் இந்த வெற்றி சாத்தியமானது. இதேபோல, கடந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு தோ்வில் 97.53 சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றது. நிகழாண்டிலும் சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளது. அனைவரது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. மேலும், மாவட்டத்திலுள்ள 137 அரசுப் பள்ளிகளில் 67 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றது பெருமையளிக்கிறது என்றாா் அவா்.