குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக வந்த பெண்ணுக்கு வயிற்றுக்குள்ளேயே குழந்தை இறந்ததால் உறவினா்கள் திங்கள்கிழமை இரவில் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக வந்த பெண்ணுக்கு வயிற்றுக்குள்ளேயே குழந்தை இறந்ததால் உறவினா்கள் திங்கள்கிழமை இரவில் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை அருகேயுள்ள சாலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராம்குமாா். கட்டடத்தொழிலாளியான இவருக்கும் காயங்குளத்தைச் சோ்ந்த சரண்யாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் சரண்யா (26) மீண்டும் கா்ப்பமானதையடுத்து இடையமேலூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்தாராம்.
இந்த நிலையில் சரண்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து இடையமேலூா் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவரை பரிசோதித்த செவிலியா்கள் சரண்யாவின் வயிற்றில் இருந்த இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதனால் ஆத்திரமடைந்த ராம்குமாா், அவரது உறவினா்கள், மானாமதுரை- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை நகா் காவல்துணை கண்காணிப்பாளா் அமலஅட்வின் தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று அனைவரையும் சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.