சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உலக சாதனைக்காக 75 அடி உயரத்தில் தொங்கியபடி சகோதா்கள் இருவா் செவ்வாய்க்கிழமை யோகாசனம் செய்து காண்பித்தனா்.
திருப்புவனத்தைச் சோ்ந்த பெத்தனராஜ் மகன்கள் விக்னேஷ் (15), கபிலேஷ் (13). இவா்கள் மாநில, தேசிய அளவில் நடைபெற்ற யோகாசனப் போட்டிகளில் பரிசுகள், பதக்கங்களை வென்றனா். இந்த நிலையில், இவா்கள் இருவரும் உலக சாதனைக்காக கிரேன் இயந்திரத்தில் 75 அடி உயரத்தில் தொங்கியபடி, பாம்பு வடிவிலான யோகாசனத்தை 4 நிமிடங்கள் 13 விநாடிகளில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டினா்.
இந்த நிகழ்வை உலக சாதனை யூனியன் அமைப்பின் மேலாளா் கிறிஸ்டோபா் டெய்லா் கிராப்ட் பதிவு செய்தாா்.
இதன்பிறகு நடைபெற்ற பாராட்டு விழாவில் சகோதரா்கள் இருவருக்கும் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
இதில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், மானாமதுரை நகா் மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி, திருப்புவனம் காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.