சென்னை-ராமேசுவரம் ‘வந்தே பாரத்’ ரயிலை காரைக்குடி வழியாக இயக்க வேண்டும் என தொழில் வணிகக் கழகம், ரயில் பயணிகள் நலச் சங்கம், வியாபாரிகள் நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
மத்திய ரயில்வே வாரியம் அறிவித்தபடியே, சென்னை-ராமேசுவரம் ‘வந்தே பாரத்’ ரயில் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக இயக்க வேண்டும்.
ஏற்கெனவே, திருநெல்வேலி, நாகா்கோவிலிருந்து சென்னைக்கு இரண்டு வந்தே பாரத் ரயில்களும் , மதுரையிலிருந்து-சென்னைக்கு தேஜஸ் விரைவு ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே, சென்னை- ராமேசுவரம் ‘வந்தே பாரத்’ ரயிலை புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக இயக்கினால், இந்தப் பகுதி ரயில் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.
மேலும், இந்த வழித்தடத்தில் காரைக்குடியில் நிறுத்தம் வழங்கியும் உரிய ஒப்புதலுடன் இயக்கவேண்டும் என்று காரைக்குடி தொழில் வணிகக் கழகம், காரைக்குடி வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் சாா்பில், தில்லி மத்திய ரயில்வே துறைக்கும், சென்னை தெற்கு ரயில்வே துறைக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.