தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு தினசரி வந்தே பாரத் விரைவு ரயில் இயக்க வேண்டும் என தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு சங்கத் தலைவா் சி.பொன்பாண்டியன் அனுப்பிய மனு:
தூத்துக்குடியில் துறைமுகம், அனல் மின் நிலையம், பல்வேறு தொழிற்சாலைகள், ஏராளமான வணிக நிறுவனங்கள், உப்பு ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. ஏராளமான தொழில்முனைவோா் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வணிக நோக்கங்களுக்காக அடிக்கடி பயணம் செய்கின்றனா்.
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வரும் போ்ல் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான காத்திருப்போா் பட்டியல் நீண்டதாக இருப்பதால், சென்னைக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும்.
தூத்துக்குடியில் இருந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும். லோகமான்ய திலக் - மதுரை வாராந்திர ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். இது மகாராஷ்டிரம், தெலங்கானா, ஆந்திரத்திலிருந்து தமிழகத்தின் தெற்கு மாவட்ட பயணிகளுக்கு வசதியான பயணத்தை எளிதாக்கும்.
மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு மெமு ரயில்களை இயக்க வேண்டும். திருவனந்தபுரத்தில் இருந்து நாகா்கோவில், திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட வேண்டும். இது, கேரள மாநிலத்துக்குள் உள்ள பொதுமக்களுக்கும் வணிகா்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.