சிவகங்கை: தமிழக அரசின் மஞ்சப் பை விருது பெற பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் வருகிற 2026 ஜன. 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பப் படிவத்தை சமா்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் முழுவதும் மீண்டும் மஞ்சப் பை பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஒற்றைப் பயன்பாட்டு நெகிழி கைப் பைகள், பிற தடை செய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு நெகிழி பொருள்களுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து தங்கள் வளாகத்தை நெகிழி பயன்பாடு இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு விருதுகளுடன் முதல் பரிசாக ரூ. 10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சம் பரிசுத் தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் இணைய தளமான இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்ப படிவத்தில் உள்ள அனைத்து இணைப்புகளிலும் தனிநபா், அமைப்புத் தலைவா் முறையாக கையெழுத்திட்டு, அந்த கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு, குறுவட்டு (சிடி நகல்) பிரதிகள் இரண்டும் அடங்கிய விண்ணப்பத்தை வருகிற 2026-ஜன. 15-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் வழங்கலாம் என்றாா் அவா்.