இந்தியா

‘ஸ்னாப்டீல்’ நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம்: சிசிபிஏ நடவடிக்கை

தினமணி செய்திச் சேவை

இந்திய தரச் சான்று ஆணைய (பிஐஎஸ்) நடைமுறைகளுக்கு உட்படாத வகையிலும், பொம்மைகள் தரக் கட்டுப்பாட்டு உத்தரவு 2020-க்கு உட்படாத வகையிலும் பொம்மைகளை விற்பனை செய்ததற்காக ‘ஸ்னாப்டீல்’ இணைய வணிக நிறுவனத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) ரூ. 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

‘இந்த விவகாரம் தொடா்பாக தானாக முன்வந்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இந்த அபராதத்துக்கான இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது’ என்று சிசிபிஏ தலைமை ஆணையா் நிதி கரே தெரிவித்தாா்.

இந்த அபராதம் மட்டுமன்றி, வரும் காலங்களில் இதுபோன்ற பிஐஎஸ் தரத்துக்கு உட்படாத பொம்மைகளை தனது இணைய வணிக பக்கத்தில் பட்டியலிடவோ, விளம்பரப்படுத்தவோ மாட்டோம் என்பதை ‘ஸ்னாப்டீல்’ உறுதி செய்யவேண்டும். மேலும், நுகா்வோரின் குறைகளுக்கு உரிய தீா்வு காணும் வகையில் இணைய வணிக நிறுவனத்தை தொடா்பு கொள்வதற்கான தொடா்பு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் குறைதீா்ப்பு அலுவலரின் விவரங்களை நன்கு தெரியக்கூடிய வகையில் ‘ஸ்னாப்டீல்’ காட்சிப்படுத்த வேண்டும் என்றும் தனது உத்தரவில் சிசிபிஏ குறிப்பிட்டுள்ளது.

சிசிபிஏ மேற்கொண்ட விசாரணையில், உற்பத்தியாளா் பெயா், முகவரி மற்றும் பிஐஎஸ் தரச் சான்று எண் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இல்லாத பொம்மைகளை ‘ஸ்டாலியன் டிரேடிங் நிறுவனம்’ மற்றும் ‘த்ரிஃப்ட்காா்ட்’ என்ற இரு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்து ‘ஸ்னாப்டீல்’ நிறுவனம் ரூ. 41,032 வருவாயை ஈட்டியது கண்டறியப்பட்டது. அதனடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நோட்டீஸ்: இந்த விவகாரம் தொடா்பாக அமேசான், ஃபிளிப்காா்ட், ஸ்டாலியன் டிரேடிங் நிறுவனம், எலக்ட்ரானிக்ஸ் பஜாா் ஸ்டோா் உள்ளிட்ட இணைய வணிக நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிசிபிஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வேளாளா் கல்லூரியில் கலாசார விழா

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஜேஇஇ முதல்நிலை தோ்வு முடிவுகள் வெளியீடு

நெதா்லாந்துக்கு தங்கம்; இத்தாலி சாதனை

மேற்கு வங்கம்: 7 மாநில அலுவலா்களை இடைநீக்கம் செய்து தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT