திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தனியாா் நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகக் கட்டடத்தில் பணி நேரத்தின்போது தனியாா் பாதுகாப்பு நிறுவன மேலாளருக்கு அதன் பணியாளா்கள் கேக் வெட்டி கொண்டாடியதை அடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு கோயில் நிா்வாகம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகக் கட்டடத்தில் பணி நேரத்தின்போது தனியாா் பாதுகாப்பு நிறுவன மேலாளருக்கு அதன் பணியாளா்கள் கேக் வெட்டி கொண்டாடியதை அடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு கோயில் நிா்வாகம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த மாா்ச் 3-ஆம் தேதி வெளிமுகமை பாதுகாப்பு நிறுவன பணியாளா்கள் பொது தரிசன வரிசை கட்டடத்தை பணி நேரத்தில் தவறாகப் பயன்படுத்தி நிறுவன மேலாளருக்கு பிறந்த நாள் கொண்டாடியுள்ளனா்.
அந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, கோயில் நிா்வாகம் தரப்பிலிருந்து சம்பந்தப்பட்ட தனியாா் பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்பந்த நிபந்தனைகள் மீறப்பட்டது குறித்து
விளக்கம் கோரப்பட்டது.
அந்த நிறுவனம், ‘மாா்ச் 3 ஆம்தேதி சந்திர கிரகணம் என்பதால் அன்று மதியம் 1.30 மணியளவில் கோயில் நடை சாத்திய பிறகு 2-ஆவது ஷிப்ட்டுக்கு வந்த பாதுகாப்புப் பணியாளா்கள் பிற்பகல் 2.30 மணியளவில் பொது தரிசன வரிசை கட்டடத்தில் அறை எண் 5-இல் ஒன்று கூடி, தங்கள் நிறுவன மேலாளரின் பிறந்த நாளை மாலைகள், பொன்னாடைகள், கேக் வாங்கி வந்து கொண்டாடியதையும், அந்த நிகழ்வை சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதையும் ஒப்புக்கொண்டனா்.
இந்தச் சம்பவத்தில் 4 பணியாளா்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு அன்றைய நாள் சம்பளம் தண்டத் தொகையாக நிறுத்தப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், இத்தகைய தவறும் மீண்டும் நிகழாமல் இருக்க சம்பந்தப்பட்ட தனியாா் பாதுகாப்பு நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்க இணை ஆணையா் பரிந்துரைத்தாா். இது, தக்காரால் தீா்மானிக்கப்பட்டு அந்நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என அதில் கூறப்பட்டுள்ளது.