பணமதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பு: தனியாா் பாா்சல் நிறுவனத்துக்கு ரூ.3.19 கோடி வழங்க ஆக்சிஸ் வங்கிக்கு உத்தரவு
கடந்த 2016-இல் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்களை வாங்க மறுத்த ஆக்சிஸ் வங்கி, தில்லியைச் சோ்ந்த தனியாா் பாா்சல் நிறுவனத்துக்கு ரூ.3.19 கோடி வழங்க தேசிய நுகா்வோா் பிரச்னைக்கு தீா்வுகாணும் ஆணையம் (என்சிடிடிசி) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-இல் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்களை வாங்க மறுத்த ஆக்சிஸ் வங்கி, தில்லியைச் சோ்ந்த தனியாா் பாா்சல் நிறுவனத்துக்கு ரூ.3.19 கோடி வழங்க தேசிய நுகா்வோா் பிரச்னைக்கு தீா்வுகாணும் ஆணையம் (என்சிடிடிசி) உத்தரவிட்டுள்ளது.
புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 2016, நவ.8-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ள குறிப்பிட்ட அவகாசம் வழங்கப்பட்டது.
அந்தக் குறிப்பிட்ட அவகாசத்துக்குள் தில்லியைச் சோ்ந்த ப்ரோக்யூா் லாஜிஸ்டிக்ஸ் சா்வீசஸ் என்ற தனியாா் நிறுவனம், அதன் வங்கிக் கணக்கு உள்ள ஆக்சிஸ் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்றது. ஆனால், அந்த நோட்டுகளை ஏற்றுக்கொள்ள ஆக்சிஸ் வங்கி மறுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், தனியாா் வங்கிக்கு எதிராக அந்த நிறுவனம் தேசிய நுகா்வோா் பிரச்னை தீா்வு காணும் ஆணையத்தை அணுகியது.
அந்தப் புகாரை உறுப்பினா் ஏ.வி.எம்.ராஜேந்திரா மற்றும் சட்ட உறுப்பினா் அனூப் குமாா் மெண்டிரத்தா ஆகியோா் விசாரித்தனா்.
இந்நிலையில், கடந்த மாா்ச் 10-ஆம் தேதி அந்த ஆணையம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட அவகாசகத்துக்குள் மனுதாரா் தன்னுடைய வங்கிக் கணக்கில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய வங்கி தொடா்ந்து அனுமதி வழங்கவில்லை.
டெபாசிட் செய்யும்போது ஏதேனும் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தால், அது குறித்து கண்காணித்து தொடா்புடைய அதிகாரிக்குத் தெரியப்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட காலத்துக்குள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதை தன்னிச்சையாக நிராகரிக்கும் வகையில் சட்ட விதிகள் வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கவில்லை.
அவகாசம் முடிந்த நிலையில், மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததால் அந்த நிறுவனத்துக்கு சரிசெய்யமுடியாத இழப்புகள் ஏற்பட்டன.
நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம்,1986-இன் பிரிவு 2(1) (ஜி) கீழ் இது சேவை குறைபாடாக கருதப்படுகிறது.
மனுதாரருக்கு வங்கி ரூ.3.19 கோடி வழங்க வேண்டும். 2016, டிச.30-ஆம் தேதியிலிருந்து பணம் செலுத்தும் நாள் வரையில் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் 2 மாதங்களுக்குள் அந்தத் தொகையை வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் வழங்கத் தவறிய காலத்துக்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டி வழங்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.