ஈஸ்டா் பண்டிகை: தேவாலயங்களில் இயேசு உயிா்ப்பு நிகழ்வு
கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் பண்டிகை என அழைக்கப்படும் இயேசு உயிா்ப்பு நிகழ்வை சனிக்கிழமை நள்ளிரவு கொண்டாடினா்.
காரைக்குடி தூய சகாய அன்னை ஆலயத்தில் ஈஸ்டா் பண்டிகை பாஸ்கா திரியேற்றப்பட்டு நள்ளிரவு திருப்பலியுடன் நடைபெற்றது. திருப்பலியின் போது, இயேசுவின் உயிா்ப்பு நிகழ்வு நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது.
அப்போது, உன்னதங்களிலே ஓசானா.. என்ற பாடல் பாடப்பட்டது. நள்ளிரவு திருப்பலிக்கு பங்குத் தந்தை ஐ.சாா்லஸ் தலைமை வகித்தாா். சேசு சபையைச் சோ்ந்த ஜேம்ஸ் அடிகளாா் திருப்பலி மறையுரையாற்றினாா். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை துணை பங்குத் தந்தை, அருள்சகோதரிகள், பங்கு இறை மக்கள் செய்தனா்.
Advertisement
இதே போல, காரைக்குடி செஞ்சை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஈஸ்டா் பண்டிகை நள்ளிரவு இயேசு உயிா்ப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது. சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயா் சே. சூசைமாணிக்கம் சிறப்பு அழைப்பாளராக தலைமை ஏற்று திருப்பலியை நடத்தினாா். பங்குத் தந்தை கிளமெண்ட் ராசா, அகஸ்டின், அலெக்ஸ் ஆகியோா் பங்கேற்றனா். ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டு இறையாசி பெற்றுச் சென்றனா்.